உள்ளூர் செய்திகள்
நீதிமன்றம்

அண்ணன் மகனை வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்- திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு

Published On 2022-04-23 11:53 IST   |   Update On 2022-04-23 11:53:00 IST
வீட்டு மனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அண்ணன் மகனை வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து திருத்தணி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட குட்டைகீழூர் கிராமத்தில் வசிப்பவர் ராமசாமி. இவருக்கு ராஜேந்திரன்(55), ராஜமூர்த்தி(50) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே வீட்டு மனை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 15.10.2013 அன்று ராஜேந்திரனின் மகன் சுரேஷ் தனது சித்தப்பா ராஜமூர்த்தியிடம் எனது தந்தையிடம் ஏன் தகராறு செய்கிறாய் என கேட்டுள்ளார், பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜமூர்த்தி கத்தியால் சுரேசை வெட்டினார். பலத்த காயமடைந்த சுரேசை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆர்.கே.பேட்டை போலீசார் ராஜமூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக திருத்தணி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் வாதங்கள் முடிவுற்ற நிலையில் சார்பு நீதிபதி காயத்திரி தேவி, ராஜமூர்த்திக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் லட்சுமணன் ஆஜராகி வாதாடினார்.

Similar News