போடி அருகே ஊராட்சி அலுவலகத்திற்கு மோடி படத்துடன் வந்த பா.ஜ.க.வினர் அலுவலகத்தை பூட்டிச் சென்றதால் பரபரப்பு
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்டது நரசிங்கபுரம் ஊராட்சி. இங்கு ஊராட்சி அலுவலக கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ராசிங்காபுரம் நீர்த்தேக்க நிலை அருகில் தற்காலிக ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஊராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க.வினர் மனு அளித்திருந்தனர். ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மத்திய அரசு நிதியை வழங்குகிறது.
எனவே மோடியின் படம் வைக்க வேண்டும் எனக்கூறி மனு அளித்திருந்தனர். மேலும் மோடியின் உருவப்படத்துடன் ஊர்வலமாக பா.ஜ.க.வினர் சென்றனர். ஆனால் அதிகாரிகள் ஊராட்சி அலுவலகத்தை பூட்டிச் சென்றதாக தெரிகிறது.
காலை 11 மணி வரையிலும் அலுவலகம் திறக்கப்படாததால் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சஞ்சீவ் கணேசன் தலைமையில் கண்டன கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து அலுவலகம் அருகிலேயே பா.ஜ.க. கொடியேற்றி பிரதமரின் படத்தை வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.