உள்ளூர் செய்திகள்
ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை படத்தில் காணலாம்.

ஷேர் ஆட்டோக்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2022-04-20 16:14 IST   |   Update On 2022-04-20 16:14:00 IST
ஷேர் ஆட்டோக்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
அரியலூர் :

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில், தொல் திருமாவளவன் எம்.பி. ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில், அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால் அரியலூரில் ஆட்டோ கட்டணம் அளவுக்கு அதிகமாக உயர்ந்து விட்டது.

சென்னையிலிருந்து அரியலூர் வருவதற்கு 270 கிலோ மீட்டர் தூரத்திற்கு 115 ரூபாய் தான் டிக்கெட். ஆனால் அரியலூர் ரெயில் நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள பேருந்து நிலையம் வருவதற்கு ஆட்டோ வாடகை 100 ரூபாய். திருச்சியிலிருந்து அரியலூர் வருவதற்கு 65 கிலோமீட்டர் விரைவு ரெயிலுக்கு ரூ.45ம், பயணிகள் ரெயிலுக்கு ரூ.20ம் கட்டணம்.

ஆனால் ரெயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் வருவதற்கு ஆட்டோ கட்டணம் ரூ.100 ஆகின்றது. அரியலூர், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர் பகுதியிலிருந்து அரியலூர் பேருந்து நிலையத்தில் இறங்கி 3 கிலோ மீட்டர் கலெக்டர் அலுவலகம் செல்ல ஆட்டோ வாடகை ரூ.100 ஆகிறது.

அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டுமென்றால் ஆட்டோ கட்டணம் நூலிலிருந்து நூற்றி ஐம்பது வரை செலுத்த வேண்டி உள்ளது.

அதனால் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும், வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும், குறிப்பிட்ட அளவு பயணிகளை ஏற்ற வேண்டும், ஷேர் ஆட்டோக்களை உடனடியாக இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News