உள்ளூர் செய்திகள்
ஆற்காடு அருகே குடும்ப தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன்
ஆற்காடு அருகே குடும்ப தகராறில் தந்தையை மகன் வெட்டி கொலை செய்தார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூரை சேர்ந்தவர் இக்பால் (வயது 60). கூலி தொழிலாளி. இவரது மகன் இம்ரான். இக்பால் மனைவி ஏற்கனவே இறந்து விட்டதால் அவருடைய மகனுடன் வசித்து வந்தார். தந்தை மகன் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் தந்தை மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இம்ரான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தையை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த இக்பால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இக்பால் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இம்ரானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.