உள்ளூர் செய்திகள்
அழுகிய உளுந்து பயிர்களை காயவைக்கும் பணியில் விவசாயிகள்

தொடர் மழையால் அழுகி, முளைக்க தொடங்கிய உளுந்து பயிர்

Published On 2022-04-18 15:51 IST   |   Update On 2022-04-18 15:51:00 IST
தரங்கம்பாடி அருகே தொடர் மழையால் அழுகி, முளைக்க தொடங்கிய உளுந்து பயிருக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரங்கம்பாடி:

டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் உளுந்து பயிர் அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தரங்கம்பாடி தாலுக்கா கிள்ளியூர் ஊராட்சியில் சுமார் 200 ஏக்கரில் மானாவாரி ஊடுபயிரான உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது, வெப்பச்சலனம் காரணமாக கடந்த வாரம் 4 நாட்கள் பெய்த கோடை மழையினால் அறுவடை செய்த உளுந்து பயிர்களை விவசாயிகள் வயலிலேயே குவித்து தார்படுதா போட்டு மூடி வைத்தனர்.

ஆனால் இந்த உளுந்து பயிரானது தொடர் மழையால் அழுகியும், முளைக்கவும் தொடங்கியுள்ளது. கடந்த சம்பா அறுவடையின்போது மழையால் அறுவடை பாதிக்கப்பட்டதாலும், தற்போது உளுந்து பயிர் அறுவடையிலும் மழையில் நனைந்து அழுகியதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

அரசு வேளாண்துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மழையில் நனைந்து வீணாகிய எஞ்சிய உளுந்து பயிரை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Similar News