சத்தியமங்கலத்தில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வுக்கு தயாரான வாலிபர் விபத்தில் பலி
சத்தியமங்கலம்:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் சந்தனபாரதி (22). பட்டதாரி வாலிபரான இவர் டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காந்தி நகர் பகுதியில் அறை வாடகைக்கு எடுத்து தனது நண்பர்களுடன் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
நேற்று இரவு 10.30 மணி அளவில் இவர் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அறையில் இருந்து வெளியே புறப்பட்டார். அவர் ரோட்டை கடந்த போது அந்த வழியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து அத்தாணி நோக்கி ஒரு வேன் வந்தது.
திடீரென அந்த வேன் சந்தனபாரதி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். விபத்து பற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான வாலிபர் சந்தனபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து பலியான வாலிபரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.