புளியந்தோப்பில் 3 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
பெரம்பூர்:
புளியந்தோப்பு ஆஞ்சநேயர் கோவில் அருகில் அண்ணாநகர் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது திருவொற்றியூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ராஜேஷ் (வயது 36) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்த போது சுமார் 3 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
உடனடியாக புளியந்தோப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர் கோட்டை ரெயில் நிலையம் எதிரில் செல்போன் கடை நடத்தி வருவதாகவும் பெரம்பூரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் கேட்டுக்கொண்டதால் திருவொற்றியூரை சேர்ந்த குமார் என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி சத்தியமூர்த்திக்கு கொடுக்க புளியந்தோப்பு பட்டாளம் வழியாக வந்ததாக ஒப்புக்கொண்டார். உடனடியாக அவரிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். இவர் மீது செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் கடத்திய வழக்குகள் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.