உள்ளூர் செய்திகள்
டெங்கு பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு
நெமிலி அருகே டெங்கு பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனர்.
நெமிலி,
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த நல்லூர் பேட்டை பெரியத்தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
கடந்த வாரம் ஆந்திர மாநிலத்திற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அப்போது பனப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் காய்ச்சல் குறையாததால் காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அங்கிருந்து சென்னை தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு டெங்கு இருப்பது உறுதியானது.
இதனையடுத்து பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராஜேஷ், வட்டார சுகாதார அலுவலர் கந்தசாமி, சுகாதார ஆய்வாளர் தமிழரசன், துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நல்லூர்பேட்டை பகுதியில் வேறு யாருக்காவது டெங்கு தொற்று உள்ளதா என நேற்று வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்தனர்.
மேலும் டவுன் பஞ்., ஊழியர்கள் செயல் அலுவலர் குமார் தலைமையில் அந்தப் பகுதியைச் சுற்றி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருகின்றனர்.