ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் சென்னை ஐ.டி. கம்பெனி பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு
ஜோலார்பேட்டை:
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவி ரஞ்சலி (வயது 25). பெங்களூருவில் தங்கியிருந்து ரஞ்சலி ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
விடுமுறையில் சென்னைக்கு சென்று வருவார். நேற்று இரவு சென்னை செல்வதற்காக பெஙகளூருவில் இருந்து காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார். 11.45 மணி அளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள பக்கிரிதக்கா என்ற இடத்தில் சிக்னலுக்காக அதிகாலை 2.30 மணிஅளவில் வந்து நின்றது.
அப்போது ஜன்னல் வழியாக கைவிட்டு வாலிபர் ஒருவர் ரஞ்சலி அணிந்திருந்த தாலி செயினை பறித்தார். அதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சலி கூச்சலிட்டவாறு செயினை பற்றி பிடித்தார்.
ஆனால் அதற்குள் செயின் கொள்ளையன் கையில் சிக்கி கொண்டது. செயினை பறித்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி சென்றான். முகத்தில் கைகுட்டை கட்டியிருந்ததால் கொள்ளையனை சரியாக அடையாளம் காணமுடியவில்லை.
செயினை பறிகொடுத்த ரஞ்சலி சென்னை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது ரெயில்வே போலீசார் ஜோலார்பேட்டை அருகே நடந்து இருப்பதால் அங்கு சென்று புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து அவர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கொள்ளையன் செயின் பறித்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.