உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மாந்தீரிகம் செய்து தருவதாகக் கூறி, ரூ.12 லட்சம் மோசடி

Published On 2022-04-07 12:41 IST   |   Update On 2022-04-07 12:41:00 IST
மாந்தீரிகம் செய்து தருவதாகக் கூறி, ரூ.12 லட்சத்தைப் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


அரியலூர்:

அரியலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். கடந்த மாதம் இவரது கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய நபர், தங்களுக்கு மர்மநபர்கள் சூனியம் வைத்திருப்பதாகவும், கொல்லிமலை சென்று பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய விஜயகுமார் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.12 லட்சம் கொடுத்துள்ளார்.

மேலும், அந்த நபர் மற்றும் கூட்டாளிகள் 2 பேர் விஜயகுமாரை இழுத்தடித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயகுமார், அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து, வழக்கு பதிந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சத்யா மகன்கள் வல்லராஜ்(வயது 25), கிருஷ்ணன்(எ) தர்மராஜ்(24), சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் சனியன் (எ) குமார் (39) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில்,

இவர்கள் சேலம் மாவட்டம், எருமபாளையம் பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம், கைரேகை பார்ப்பதாகக் கூறி, தங்களுக்கு தோஷம், செய்வினை உள்ளதாகத் தெரிவித்து அவர்களது கைப்பேசி எண்களைப் பெற்று, பின்னர் அவர்களை அச்சுறுத்தி பணம் பறித்து வந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள கார், இரு சக்கர வாகனங்கள், நகைகள் உள்ளிட்டவைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Similar News