உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-04-07 06:05 GMT   |   Update On 2022-04-07 06:05 GMT
பொது இடத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

தமிழகத்தில் கஞ்சா விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு பயந்து தமிழக கஞ்சா வியாபாரிகள் தற்போது புதுவைக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். அவர்கள் புதுவையில் முகாமிட்டு பண ஆசைகாட்டி வாலிபர்களை கஞ்சா விற்பனை செய்ய தூண்டி வருகின்றனர். 

சமீப காலமாக புதுவையில் கஞ்சா விற்பனை ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டாலும் கஞ்சா விற்பனை முழுமையாக கட்டுப்படுத்தமுடியாமல் போலீசார் திணறி வருகின்றார்கள். ஒரு நாளைக்கு 2,3 இடங்களில் கஞ்சா விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். 

புதுவை சவுரிராயலு வீதியில் உள்ள அரசு பள்ளி எதிரே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த ஆன்ட்ரூஸ் சேவியர் (வயது 25) என்பவரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். 

இந்த நிலையில் புதுவை புது சாரம் பாலாஜி நகரில் பொது இடத்தில் நின்று வாலிபர்கள், கூலித் தொழிலாளிகள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். 

அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை நடத்தினர்.  அவரது சட்டைப் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. சிறு, சிறு பொட்டலங்களாக மொத்தம் 175கிராம் கஞ்சாவை அவர் மறைத்து வைத்து இருந்தார்.

இதனை தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை பறி முதல் செய்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புது சாரம் பாலன் நகரை சேர்ந்த செல்வகுமார் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.  
Tags:    

Similar News