உள்ளூர் செய்திகள்
சஸ்பெண்டு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ‘சஸ்பெண்டு’

Published On 2022-04-07 05:56 GMT   |   Update On 2022-04-07 05:56 GMT
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மேலும் 3 மாணவிகள் புகார் அளித்துள்ளதால் அதனடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே திருவரங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிபவர் ஆரோக்கியதாமஸ். இவர் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் ஆரோக்கியதாமஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அவரை போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாகி விட்டார். ஆசிரியரை அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வாணி பகுதியில் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் ஆரோக்கியதாமஸ் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தரப்பில் கூறும்போது, ‘சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளி நிர்வாக தரப்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அறிக்கையை மாநிலக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி ஆசிரியர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றனர்.

இதற்கிடையில் ஆசிரியர் ஆரோக்கியதாமஸ் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளதாகவும், அதனடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


Tags:    

Similar News