உள்ளூர் செய்திகள்
விதிகளை மீறி மாடுகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல்
விதிகளை மீறி மாடுகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு தொடர்பாக எருதுகளை வாகனத்தில் ஏற்றி செல்வது தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 237&ன் கீழ் வாகனங்களில் ஜல்லிக்கட்டு எருதுகளை ஏற்றிச் செல்லும் போது ஒரு எருதிற்கு வாகனத்தில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச இடவசதி இருக்க வேண்டும். எருதுகள் நிற்கும் தள பரப்பு பகுதிகள் வலுவான மர பலகைகள் கொண்டு தயாரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். அல்லது இரும்பு தகடுகள் கொண்டு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
எருதுகளை கவனித்துக் கொள்ள ஒரு நபரை நியமிக்க வேண்டும். பயண நேரத்தில் கால்நடைகளுக்கு தேவையான போதுமான அளவு தண்ணீர் மற்றும் உணவுகளை வழங்க வேண்டும். கால்நடைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிகபட்சம் 30 கிமீ வேகத்தில் மட்டுமே இயங்க வேண்டும்.
மேற்கண்டவாறு மோட்டார் வாகன விதி படி எருதுகளை கவனமாக ஏற்றி செல்ல அறிவுறுத்தப்படுகிறது. தவறும்பட்சத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிப்படி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.