பணகுடி அருகே நள்ளிரவில் விபத்து: சிமெண்ட் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் பலி
வள்ளியூர்:
அரியலூர் மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சிமெண்ட் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. லாரியை தெற்கு விஜயநாராயணத்தை சேர்ந்த மாணிக்கவாசம்(வயது 41) என்பவர் ஓட்டி சென்றார்.
நேற்று நள்ளிரவு நான்குவழிச்சாலையில் இருந்து அஞ்சுகிராமம்- கூடங்குளம் சாலையில் லாரி சென்றுக்கொண்டிருந்தது. உடையநேரி குளம் அருகே உள்ள வளைவில் திரும்பிய லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் எதிர்பாராத விதமாக மாணிக்கவாசகம் லாரியின் அடியில் சிக்கி துடிதுடித்து இறந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் யாரும் அந்த பகுதியில் வரவில்லை.
இதற்கிடையே அந்த லாரியுடன் சேர்ந்து சிமெண்ட் ஏற்றி வந்த மற்றொரு லாரி டிரைவர் அதனை கண்டு பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
வள்ளியூர் தீயணைப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு அவர்கள் விரைந்து வந்தனர். கிரேன் மூலமாக லாரியை அப்புறப்படுத்தி அதன் அடியில் சிக்கி இறந்த மாணிக்க வாசகம் உடலை மீட்டனர்.
போலீசார் அவரது உடலை நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.