தேவகோட்டையில் பெயிண்டர் கொலையில் 6 பேர் கைது
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புதுத் தெருவைச் சேர்ந்தவர் உமர் பாருக் (வயது 38), பெயிண்டர். இவர் சாத்திக் கோட்டை அருகே தனியார் மருத்துவமனை பின்புறம் ரத்தக்காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி உமர் பாருக் பரிதாபமாக இறந்தார். அவரது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதால் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சிவகுமார், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இதில் உமர் பாரூக்கை கொலை செய்ததாக சின்னக் கோடகுடியைச் சேர்ந்த விமல் (வயது 24), பிரவீன் (20), கைக்குடியைச் சேர்ந்த பிரபா என்ற பிரபாகரன் (26), நல்லாங்குடி செல்வ குமார் (24), பல்லாகுளம் தர்மர் (24), தேரளப்பு கார்த்திக் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொலைக்கான காரணம் குறித்து கைதானவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-
உமர்பாரூக் மணல் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது அங்கு வழிப்பறி வழக்கில் கைதாகி விமல் இருந்தார். அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு விடுதலையாகி வந்த அவர்கள் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் கிடைத்த பொருட்களை உமர் பாருக்கிடம் மற்றவர்கள் கொடுத்ததாகவும் அது குறித்து கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்காததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.