உள்ளூர் செய்திகள்
கை கால்களை கட்டிப்போட்டு கொடூரக்கொலை
வாழப்பாடியில் கை கால்களை கட்டிப்போட்டு கொடூரக்கொலை செய்யப்பட்டவர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வாழப்பாடி:
வாழப்பாடி பேரூராட்சி பெரியசாமி நகர் பகுதியில் மயானம் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இப்பகுதியில் யாரும் செல்லவில்லை.
இந்நிலையில், நேற்று இந்த மயானத்தில் புதர்களை அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது கயிற்றில் சுற்றி, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், புதருக்குள் ஒரு மனித உடல் அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்துள்ளனர்.
இது குறித்து வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இந்த உடல் ஆணா? பெண்ணா? என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உருக்குலைந்து நிலையில் எழும்புக்கூடாக காணப்பட்டது.
சேலம் தடய அறிவியல் துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தடய அறிவியல் துறை ஆய்வு செய்த பிறகே கொலையுண்டவர் ஆணா? பெண்ணா? என்பது உள்ளிட்ட தகவல்கள் தெரியவரும்.
மேலும் இப்பகுதியில் கிடைத்துள்ள தடயங்களை கைப்பற்றி வாழப்பாடி போலீசார், கொலையுண்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.