உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் மணல், சாராயம், கஞ்சா, குட்கா கடத்திய 1,273 பேர் கைது
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மணல், சாராயம், கஞ்சா, குட்கா கடத்திய 1,273 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளசாராயம், மதுவிலக்கு, கஞ்சா, குட்கா, மணல் கடத்தல் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் கள்ளசாராயம், மதுவிலக்கு தொடர்பாக மொத்தம் 1,048 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 951 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 9374 லிட்டர் காய்ச்சுவதற்கு கள்ளசா ராயமும், அக்கள்ளச்சாரயம் பயன்படுத்தப்பட்ட 145 கிலோ கிராம் வெல்லம் மற்றும் 43300 லிட்டர் சாராய ஊறல்களையும், 6425 மதுபான பாட்டில்களையும் கைப்பற்றி அவற்றை அழித்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 31 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மணல் கடத்திய 136 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொத்தம் 118 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கஞ்சா தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டு கஞ்சா விற்பனையை பிரதான தொழிலாக கொண்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 52 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5,24,400 ஆகும்.
குட்கா தொடர்பான வழக்கில் மொத்தம் 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றின் மூலம் 160 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 1292 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.8,93.377 ஆகும்.
தடை செய்யப்பட்ட லாட்டரி தொடர்பாக மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 16. வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 16 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.5210 கைப்பற்றப் பட்டுள்ளது.
மேற்கண்ட குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் யார் என அடையாளம் காணப்பட்டால் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.