உள்ளூர் செய்திகள்
காலிக்குடங்களுடன் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்

கயத்தாறு அருகே இன்று காலிக்குடங்களுடன் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்- கடும் வெயிலால் 3 பேர் மயக்கம்

Published On 2022-04-02 14:12 IST   |   Update On 2022-04-02 14:12:00 IST
ராஜாபுதுக்குடி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் கூட்டுக்குடிநீர் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா ராஜாபுதுக்குடி அருகே கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அமைந்துள்ளது.

இந்நிலையில் ராஜாபுதுக்குடி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் கூட்டுக்குடிநீர் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, மண்டல துணை தாசில்தார் திரவியம், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்டவர்கள் பொது மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடந்த 1972-ம் ஆண்டு முதல் கோவில்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தினந்தோறும் ராஜாபுதுக்குடி உள்ளிட்ட அனைத்து பகுதியினருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

பின்னர் அந்த பைப்லைனில் பழுது ஏற்பட்ட காரணத்தால் ரூ. 600 கோடி மதிப்பீட்டில் சாத்தூர் கூட்டுகுடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு தண்ணீர் வழங்கப்படாமல் உள்ளது. பலமுறை இது தொடர்பாக நாங்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து அவர்களிடம் அரசு அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்ததை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடும் வெயிலில் இன்று பொது மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அதிக வெயில் காரணமாக 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 3 பேர் திடீரென மயக்கம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News