உள்ளூர் செய்திகள்
புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்வு
புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுவையில் ஆண்டுதோறும் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
2022-2023-ம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டணம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காணொலியில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பின் உத்தேச கட்டணமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறிவிக்கப்பட்டு இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி புதுவையில் வீட்டு உபயோக மின்கட்டணம் உயர்ந்துள்ளது. 100 யூனிட்டுக்குள் ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் 35 பைசா உயர்ந்து ரூ.1.90 ஆகவும், 101-ல் இருந்து 200 யூனிட் வரை ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் 15 பைசா உயர்ந்து ரூ.2.75 ஆகவும் உயர்ந்துள்ளது.
201 யூனிட்டுக்கு மேல் வீட்டு உபயோக கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. வர்த்தகம், விவசாய மின் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.