உள்ளூர் செய்திகள்
பிரதமருடன் கலந்துரையாடல்- புதுவையில் மாணவர்களுடன் ரங்கசாமி பங்கேற்பு
பிரதமருடன் கலந்துரையாடலில் புதுவையில் மாணவர்களுடன் ரங்கசாமி பங்கேற்றார்.
புதுச்சேரி:
பிரதமர் நரேந்திர மோடி இந்திய அளவில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுடன் நேரடியாக கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் “தேர்வுகள் குறித்த விவாதம் 2022“ (பரிக்ஷா பே சர்ச்சா 2022) கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று டெல்லி தால்கட்டோரா அரங்கில் நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பயனடையும் வகையில் உயர்கல்வி நிறுவனங்களில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுவை கல்வித்துறை சார்பில் மொத்தம் 178 உயர்கல்வி மற்றும் மேல்நிலைப்பள்ளி களில் ஒளிபரப்பட்டது.
புதுவை கவர்னர் மாளிகையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சி திரையிடப்பட்டது. கல்வித்துறை சார்பில் 50 மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்றனர். அமைச்சர் லட்சுமிநாராயணன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்தரி, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அலுவல் காரணமாக தெலுங்கானா மாநிலம் சென்றுள்ள கவர்னர் தமிழிசை தெலுங்கானா கவர்னர் மாளிகையில் மாணவர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சியை கவனித்தார். பிரதமரின் உரைக்குப்பின் தெலுங்கானா கவர்னர் மாளிகையில் இருந்து காணொலி மூலமாக புதுவை கவர்னர் மாளிகையில் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
புதுவை கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலந்துரையாடலில் மாணவிகளுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் காலாப்பட்டு, ஜிப்மர் வளாகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திர வித்யாலாயா பள்ளிகளில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.