உள்ளூர் செய்திகள்
பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்.ஆர். இலக்கிய பேரவை வலியுறுத்தல்
பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என என்.ஆர். இலக்கிய பேரவை வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் விவசாயத்துக்கான நிலப்பரப்பு குறைந்து வருவதால் விவசாயிகளின் உபரி வருமான கால்நடைகள் பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதிலும் பால் உற்பத்தியாளர்கள் தங்களது கால்நடைகளை வீட்டிலேயே வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் தீவன பொருட்களை மட்டுமே நம்பி உள்ளதால் அவ்வப்போது ஏற்படும் விலை ஏற்றத்தால் எண்ணற்ற பால் உற்பத்தியாளர்கள் தங்களின் கால்நடைகளை விற்று விட்டு கூலி வேலைக்கு சென்று விடுகின்றனர். இதனால் மாநிலத்தில் பால் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. தற்போது இருக்கின்ற பால் உற்பத்தியாளர்களை தக்க வைத்து பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
எனவே, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதன் மூலம் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்துவதோடு அல்லாமல் புதிதாக பால் உற்பத்தியாளர்களை ஈர்க்கும் விதமாக அமையும். இதன் மூலம் புதுவையில் மீண்டும் வெண்மை புரட்சிக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.