உள்ளூர் செய்திகள்
சட்டபேரவை மனுக்கள் குழுவிற்கு பொது பிரச்சினை குறித்து தகவல் தெரிவிக்கலாம்- கலெக்டர் அறிவிப்பு
சட்டபேரவை மனுக்கள் குழுவிற்கு பொது பிரச்சினை குறித்து தகவல் தெரிவிக்கலா என கலெக்டர் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தர உள்ள சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழுவிற்கு பொதுப் பிரச்சினைகள் குறைகள் குறித்து மனுக்கள் அனுப்பலாம்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற பேரவையின், 2021-22 -ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு ராணிப்பேட்டை மாவட்டத்தில் விரைவில் விடுவதென முடிவு செய்துள்ளது.
இதனையொட்டி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபர், சங்கங்கள் அல்லது நிறுவனங்கள் தீர்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்சினைகள், குறைகள் குறித்து மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர்/ மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை என்ற முகவரிக்கு வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்பலாம்.
மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்னைகள் குறித்த தகவல்கள் இருக்க வேண்டும்.
மனுக்கள் ஒரே ஒரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையை சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவை இருத்தல் கூடாது.
சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்கு உட்பட்ட மனுக்களை மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும்.
ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனோ மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அவ்வமயம் மனுதாரர் முன்னிலையில் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டு அறியப்படும்.
இதுகுறித்து மனுதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 20-ந்தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.