உள்ளூர் செய்திகள்
மணல் கடத்தல்காரருடன் போலீசார் உரையாடல் குறித்து விசாரணை
மணல் கடத்தல்காரருடன் போலீசார் உரையாடல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை இயங்கி வருகிறது. இவர்கள், மாவட்டம் முழுவதும் சென்று குற்றச்சம்பவங்கள், சட்ட விரோத செயல்கள் தொடர்பாக சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
மாவட்டத்தின் மிகவும் அதிகாரம் மிக்க அமைப்பாக செயல்படும் இந்த குழுவின் மீது சமீப காலமாக தொடர் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது.
தனிப்படையில் செயல்படும் சிலர் சட்ட விரோத செயல்களில் நேரடியாக ஈடுபட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது.
இதற்கிடையில், வேலூரில் மணல் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய பஞ்சர் மணி என்பவரை மணல் கடத்தலில் ஈடுபட கூறியதுடன், அவர் கடத்திச் சென்ற கடத்தல் மணல் வாகனம் பாகாயம் போலீஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கூறியதின் பேரில் கடத்தப்பட்ட மணல் வண்டியை விடுவிக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பான செல்போன் உரையாடல் தற்போது வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேற்று விசாரணை நடத்தினார். மணல் கடத்தல் நபருடன் தனிப்படை போலீஸ்காரர் நடத்திய ஆடியோ குற்றச்சாட்டுகள் குறித்து ஏ.டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர்.