உள்ளூர் செய்திகள்
விபத்து

ஆலங்குளத்தில் விபத்து: வியாபாரி-வாலிபர் பலி

Published On 2022-03-31 05:39 GMT   |   Update On 2022-03-31 05:39 GMT
ஆலங்குளத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி, வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). இவர் பீடி வியாபாரம் செய்து வந்தார்.

ஆலங்குளம் சி.எஸ். ஐ.சர்ச் தெருவை சேர்ந்தவர் சொரிமுத்து. இவரது மகன் மாரிமுத்து (20). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு முருகேசன் ஆலங்குளம்- அம்பை சாலையில் உள்ள தியேட்டர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பஸ் ஒன்று பயணிகளை இறக்கி விட்டு புறப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக வந்த முருகேசன் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அந்த நேரத்தில் பஸ்சின் பின்புறம் மாரிமுத்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிள், முருகேசன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாரிமுத்து, முருகேசன் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முருகேசன் உயிரிழந்தார். இன்று அதிகாலை மாரிமுத்துவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாரிமுத்துவின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் அவரது தாயார் மாரிமுத்துவை கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் மாரிமுத்துவின் தங்கைக்கு திருமணம் நடந்தது என்ற விபரம் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News