உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

நண்பருக்கு அரிவாள் வெட்டு - தொழிலாளி கைது

Published On 2022-03-29 13:08 IST   |   Update On 2022-03-29 13:08:00 IST
நாகை அருகே நண்பரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி ஆலங்குடிச்சேரி பகுதியை சேர்ந்த சௌரிராஜன் மகன் சரவணன் (வயது 48). கொத்தனார். இவரும் திட்டச்சேரி ப.கொந்தகை டி.ஆர்.பட்டினம் ரோட்டை சேர்ந்த காசிநாதன் மகன் ராஜா (வயது 49). கொத்தனார்.இருவரும் நண்பர்கள்.

இந்த நிலையில் சரவணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சிக்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து நேற்று முதல் நாள் சொந்த ஊரான ஆலங்குடிச்சேரிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் தனது நண்பர் ராஜாவை பார்ப்பதற்கு வீட்டிற்கு சரவணன் சென்றுள்ளார். அங்கு ராஜாவின் குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு வெளியூர் சென்றிருந்தனர்.

சரவணன், ராஜா இருவரும் வீட்டில் மது அருந்தி உள்ளனர்.அப்போது ராஜா, சரவணனிடம் நாம் இருவரும் வேலைக்கு எங்கு சென்றாலும் ஒன்றாக தானே செல்வோம். பின்னர் எதற்காக என்னை விட்டுவிட்டு திருச்சி வேலைக்கு தனியாக சென்றாய் என கேட்டுள்ளார்.

இதனால் மதுபோதையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராஜா அரிவாளை எடுத்து சரவணனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

Similar News