உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை அமைச்சர் வழங்கிய காட்சி.

விவசாயிகளுக்கு ரூ.31.87 லட்சத்தில் வேளாண் இடுபொருட்கள் அமைச்சர் ரகுபதி வழங்கினார்

Published On 2022-03-28 12:02 IST   |   Update On 2022-03-28 12:02:00 IST
விவசாயிகளுக்கு ரூ.31.87 லட்சத்தில் வேளாண் இடுபொருட்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா, கலெக்டர்  கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

விழாவில்  அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு ரூ.31.87 லட்சம் மதிப்புடைய வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும் போது, தமிழக வரலாற்றில் முதல் முறையாக விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்கும்.

அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்திற்குட்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், அட்மா, கூட்டுப் பண்ணையத் திட்டம்,

பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின்கீழ் பவர் டில்லர், தெளிப்பு நீர்பாசனக் கருவிகள், மழைத்தூவான், கைத்தெளிப்பான், தென்னைமரம் ஏறும் கருவிகள், தார்பாலின் போன்ற பல்வேறு விவசாய இடுபொருட்கள் மானிய உதவியுடன்  விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Similar News