உள்ளூர் செய்திகள்
வெயில்

கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி

Published On 2022-03-27 16:50 IST   |   Update On 2022-03-27 16:50:00 IST
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரங்களில் சற்று பனிமூட்டம் இருந்துவரும் நிலையில் நேரம் கடக்க கடக்க கடும் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து சூறாவளி காற்றுடன் மிக கனமழை பெய்து வந்த காரணத்தினால் மாவட்டம் முழுவதும் வெள்ளைக்காடானது.

இதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை கடலூர் மாவட்டத்தில் ஓரிரு நாட்கள் மழை பெய்து வந்த நிலையில் காலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக அவ்வபோது மாவட்டம் முழுவதும் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என அனைவரும் அறிந்ததே. மேலும் கடந்த ஆண்டு குறைந்தபட்சம் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் அளவு பதிவானது குறிப்பிடத்தக்கதாகும்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரங்களில் சற்று பனிமூட்டம் இருந்துவரும் நிலையில் நேரம் கடக்க கடக்க கடும் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. இதன் காரணமாக மதிய நேரங்களில் அனல் காற்று வீசி வருவதோடு வழக்கத்தைவிட புழுக்கம் அதிகரித்து பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்பவர்கள் முகத்தில் துணி கட்டிக் கொண்டும், சிலர் குடைப்பிடித்து நடந்து செல்வதையும் காண முடிந்தது. மேலும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு இது போன்ற வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வருங்காலங்களில் கோடைகாலம் மற்றும் அக்னி நட்சத்திர வெயில் போன்றவற்றை கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக தாக்க கூடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் காணப்பட்டு வருகின்றனர்.

மேலும் தற்போது வழக்கத் தைவிட சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலையோர சிறு வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் ராட்சத குடையை நட்டு வைத்தும், சிலர் தலையில் துணியால் போர்த்திக் கொண்டும் வியாபாரம் செய்தனர்.

மேலும் நீர்மோர், பழச்சாறு, சாத்துக்குடி ஜூஸ், கரும்பு சாறு, பதனீர், இளநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகியும், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, நுங்கு மற்றும் பழங்களை வாங்கி சாப்பிட்டும் தாகத்தை தணித்துக்கொண்டனர்.

Similar News