உள்ளூர் செய்திகள்
கடலூர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் திரண்ட மினி கிளினிக் டாக்டர்கள்
கடந்த ஜனவரி மாதம் முதல் சம்பளம் வழங்கவில்லை என கூறி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு கிளினிக் டாக்டர்கள் திரண்டனர்.
கடலூர்:
கடலூர் கடற்கரை சாலையில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு கிளினிக் டாக்டர்கள் திரண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் அரசு மினி கிளினிகில் எங்களை பணியமர்த்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வந்தோம்.
ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதல் எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில் வருகிற மார்ச் 31- ந் தேதிக்கு பிறகு எங்களை பணி நீக்கம் செய்யபோவதாக தகவல் கிடைத்து உள்ளது. ஆகையால் மார்ச் 31-ந் தேதிக்குள் எங்களுக்கு நிலவில் உள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.