உள்ளூர் செய்திகள்
கைது

சென்னையில் நீதிபதியின் பாதுகாவலரை வெட்டிய 2 வாலிபர்கள் கைது

Published On 2022-03-25 06:05 GMT   |   Update On 2022-03-25 06:05 GMT
சென்னையில் நீதிபதியின் பாதுகாவலரை வெட்டிய 2 வாலிபர்களை திருப்பூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர்:

போலீஸ் வாரியத்தின் தலைவராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் உள்ளார். கடந்த 22-ந் தேதி காலை தனது காரில் சென்னை அசோக் நகரில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தார். கே.கே.நகர் வழியாக அசோக் நகர் சிக்னல் அருகே கார் வந்தது.

அப்போது கார் முன்பாக, மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த 3 பேர் முன்நோக்கி செல்லாமல் வெகுநேரம் நின்றனர். இதனால் முன்னாள் நீதிபதியின் பாதுகாவலர் சக்திவேல்( வயது 52)என்பவர், கார் செல்லும் வகையில் வழி ஏற்படுத்த முயன்றார்.

அப்போது மதுபோதையில் இருந்த 3 பேரும் வழிவிடாமல் தொடர்ந்து நின்றவாறு சக்திவேலுடன் தகராறு செய்தனர். மேலும் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேல் தலையில் வெட்டி விட்டு 3பேரும் தப்பிச் சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த தாக்குதல் தொடர்பாக புருஷோத்தமன்(29) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 2பேரை தேடி வந்தனர். அவர்கள் இருவரும் திருப்பூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து திருப்பூர் மாநகர போலீசார் உதவியுடன், சென்னை கே.கே.நகர் தனிப்படை போலீசார் திருப்பூரில் முகாமிட்டு தேடி வந்தனர். அப்போது திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த நிஷாந்த்(26), திருச்சியை சேர்ந்த மனோஜ்(22) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News