உள்ளூர் செய்திகள்
வீரளூர் சுடுகாட்டுப் பிரச்சினையில் இறந்தவர் உடல் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
வீரளூரில் சுடுகாட்டுப் பிரச்சினையால் இறந்தவர் உடல் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை:
கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட வீரளூர் ஊராட்சி அருந்ததியர் காலனி பகுதி சுடுகாட்டு பாதை சரியில்லாத காரணத்தால் ஊரின் வழியாக செல்லும் மெயின் ரோடு வழியாக இறந்தவரின் உடலை எடுத்து அடக்கம் செய்ய அனுமதி பெற்று இருந்தனர்.
இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு சமரசம் செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது நேற்று முன்தினம் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் சென்னையில் விபத்தில் இறந்தார்.
அவரின் உடலை அடக்கம் செய்ய நேற்று வீரளூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனால் அப்பகுதியில் மீண்டும் பிரச்சினை ஏற்படுமா என்ற காரணத்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பவன்குமார் தலைமையில் ஏடிஎஸ்பி, 4 மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் இறந்த கோவிந்தசாமி உடலை ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த வீரளூர் கிராமத்தின் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
இதனை தொடர்ந்து அக்கிராமத்தில் பிரச்சனை ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.