உள்ளூர் செய்திகள்
நாகையில் 1 லட்சத்து 51 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
நாகை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்பொருள் கழக துணை மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்காக மாவட்டத்தில் 156 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை 1 லட்சத்து 51 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 3 ஆயிரம் மெட்ரிக் டன் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் 55 ஆயிரம் மெட்ரிக் டன் வெளி மாவட்டங்களுக்கு ரெயில்வே வேகன் மூலம் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதிக்குள் நெல்கொள்முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தீவிரமாக நெல் கொள்முதல் நடந்து வருகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மாவட்டத்திலுள்ள 5 திறந்தவெளி மையத்தில் சேமிக்கப்பட்டு வருகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை நாகை மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக (நெல் கொள்முதல் மற்றும் இயக்கம்) துணை மேலாளர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.