உள்ளூர் செய்திகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கமலகண்ணன்

காவல் நிலையம் முன்பு வாலிபர் தற்கொலை முயற்சி

Published On 2022-03-23 14:19 IST   |   Update On 2022-03-23 14:19:00 IST
வாலிபர், காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் :

அரியலூர் மாவட்டம் சுத்துக்குளம் கிராமத்திலுள்ள முனீசுவரன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத் திருவிழாவும், மஞ்சுவிரட்டும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், மஞ்சுவிரட்டுக்கு மட்டும் வட்டாட்சியர் ஆனந்தன் அனுமதியளிக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி, கடந்த 16- ந் தேதி மஞ்சுவிரட்டு நடத்த கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்திருந்தனர்.

தகவலறிந்த வட்டாட்சியர் ஆனந்தன், கடந்த 15- ந் தேதி இரவு காவல் துறையினருடன் சுத்துக்குளம் கிராமத்துக்குச் சென்று, அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை பொக்லைன் எந்திரத்தை கொண்டு அகற்றினார்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சிலர், வட்டாட்சியர் ஆனந்தனைத் தாக்கியதுடன், அவரது அரசு வாகனத்தையும் சேதப்படுத்தினர். இது குறித்து மீன்சுருட்டி காவல் துறையினர், விழாக்குழுவினர் உள்பட 47 பேர் மீது வழக்குப்பதிந்து, 18 பேரை கைது செய்தனர். மற்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும், கடலூர் மாவட்டம், வீராணம் அருகிலுள்ள பெரியபுங்கேரி கிராமத்தைச் சேர்ந்த கமலகண்ணனை தேடி, அவரது வீட்டுக்கு காவல் துறையினர் சென்றனர்.

இதையறிந்த கமலகண்ணன் தனது ஊரிலிருந்து புறப்பட்டு, மீன்சுருட்டி காவல் நிலையத்துக்கு வந்து, நுழைவாயில் முன்பு பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையறிந்த காவல் துறையினர், அவரை மீட்டு மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அவர்  ஜெயங்கொண்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News