பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்- அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 480 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.
பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் மூலம் நீரில் மூழ்கி உயிரிழந்த பண்ருட்டி வட்டம், மேல்குமாரமங்கலம் கிராமத்தை சோர்ந்த சந்தோஷ் அவரது குடு ம்பத்தினருக்கு ஒரு லட்ச த்திற்க்கான காசோலையினையும், நீரில் மூழ்கி உயிரிழந்த புவனகிரி வட்டம், பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சோர்ந்த தாரணிஷா குடும்பத்தினருக்கு ஒரு லட்சத்திற்கான காசோலையினையும் வழங்கினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத் சிங், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கற்பகம் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.