உள்ளூர் செய்திகள்
70 ஆயிரம் சிறுவர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 15 வயது முதல் 18 வயதுடைய 70 ஆயிரத்து 730 சிறுவர்களுக்கு கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கொரோனா தாக்கம் ஏற்பட்டாலும் லேசான அறிகுறிகளையே அவர்கள் குணம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து 12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது.
இதில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 161 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 86,939 சிறுவர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 83 சதவீதமாகும்.
இந்நிலையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கடந்த சிறுவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்டத்தில் இதுவரை 15 வயது முதல் 18 வயதுடைய 70 ஆயிரத்து 730 சிறுவர்களுக்கு கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது 70.48 சதவீதமாகும்.
இதேப்போல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 16 லட்சத்து 32 ஆயிரத்து 244 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 90.22 சதவீதமாகும்.
2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை மாவட்டத்தில் 12 லட்சத்து 87 ஆயிரத்து 872 பேர் செலுத்தியுள்ளனர். இது 71.99 சதவீதமாகும்.
2 தவணை தடுப்பூசி களையும் சேர்த்து மொத்தம் 29 லட்சத்து 20 ஆயிரத்து 116 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.