உள்ளூர் செய்திகள்
கற்பழிப்பு

நண்பருடன் படம் பார்க்க சென்ற ஆஸ்பத்திரி பெண் ஊழியரை ஆட்டோவில் கடத்தி பலாத்காரம்

Published On 2022-03-21 15:19 IST   |   Update On 2022-03-21 15:19:00 IST
பொதுமக்கள் நள்ளிரவு நேரங்களில் ஆட்டோவில் செல்லும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்:

வேலூர் காட்பாடியில் திருவலம் ரோட்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட தியேட்டரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் இரவு காட்சி சினிமா பார்க்கச் சென்றனர்.

படம் முடிந்து இரவு 12.30 மணிக்கு 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர். இவர்களை நோட்டமிட்ட மர்மநபர்கள் 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்தனர்.

ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.

இது ஷேர் ஆட்டோ தான் நீங்கள் ஏறுங்கள் என டிரைவர் கூறினார். இதனை கேட்டதும் இருவரும் ஆட்டோவில் ஏறினர்.

காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அங்கே சாலையை மறைத்து வேலை ஏதோ நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர்.

சர்வீஸ் சாலையில் பாய்ந்து சென்ற ஆட்டோ சத்யா ஷோரூம் முன்பாக உள்ள சாலை வழியாக பாலாற்றின் கரைக்கு சென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதுவரை அமைதியாக இருந்த கும்பல் கத்திமுனையில் மிரட்டத் தொடங்கினர். பெண் ஊழியரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்களை பறித்தனர்‌. மேலும் ஏ.டி.எம். கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்து சென்று விட்டனர்.

இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறவில்லை.

இந்த நிலையில் சத்துவாச்சாரியில் நேற்று ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டனர். அதில் சிலர் டிப்டாப் உடை அணிந்திருந்தனர். அவர்களை சத்துவாச்சாரி போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அணிந்திருந்த டிப்டாப் ஆடை குறித்து விசாரித்தனர்.

அதில்தான் அவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேரை ஆட்டோவில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததும் தொடர்ந்து அவர்களின் செல்போன் மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்தது தெரியவந்தது. அந்த பணத்தில் டிப்டாப் உடையை வாங்கியும் மற்றும் உல்லாசமாக செலவு செய்துள்ளனர்.

இந்த துணிகர செயலில் ஈடுபட்ட கும்பல் குறித்து துப்பு துலங்கி உள்ளது. இதில் 2 பேரை சத்துவாச்சாரி போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாநகர பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ரெயில்கள் மூலம் வட மாநிலங்களில் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக நள்ளிரவு நேரங்களிலும் ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம் வருகின்றனர்.

அவர்களை ஆட்டோ டிரைவர்கள் பாதுகாப்பாக ஆஸ்பத்திரி முன்பு இறக்கி விட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் ஷேர் ஆட்டோ எனக் கூறி டாக்டர்களை கடத்தி செல்போன் பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

இதனால் ஆட்டோ பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நள்ளிரவு நேரங்களில் ஆட்டோவில் செல்லும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News