ஸ்ரீமுஷ்ணம் அருகே தீ விபத்தில் 2 வீடுகள் சாம்பல்
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அருணாசலம். இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளிகள்.
நேற்று தங்களது குடும்பத்தினருடன் கூலி வேலைக்கு சென்று விட்டனர். மாலை 5 மணி அளவில் மின்கசிவு காரணமாக கலியமூர்த்தி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகே இருந்த அருணாசலத்தின் வீட்டிலும் பரவியது.
இந்த தீ விபத்து தொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் 2 வீடுகளும் முழுமையாக எரிந்து சாம்பலாகிவிட்டது.
இந்த தீவிபத்தில் 2 வீடுகளில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது. 2 வீடுகளிலும் வசித்து வந்த 8 பேரும் வேலைக்கு சென்று விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் சிமெண்டு கூரை மற்றும் தகரத்தால் கூரை அமைக்கப்பட்டிருந்ததால் அந்த வீடுகளுக்கு தீ பரவவில்லை.