சேத்தியாத்தோப்பு அருகே பணத்தை எண்ணி தருவதாக கூறி முதியவரிடம் மர்ம நபர் பணம் அபேஸ்
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 70) இவர் சம்பவத்தன்று சேத்தியாதோப்பு தனியார் வங்கியில் ரூ. 39 ஆயிரம் எடுத்து கொண்டு வெளியே வந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போது மர்ம நபர் கவனித்தார். உடனே அந்த நபர் சாமிநாதனிடம் பணத்தை எண்ணி தருவதாக கூறி வாங்கி ரூ. 20 ஆயிரம் பணத்துடன் ஓடினார். மீதம் ரூ. 19 ஆயிரம் மட்டுமே சாமிநாதனிடம் இருந்தது.
அதிர்ச்சி அடைந்த சாமிநாதன் இதுபற்றி சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் சேத்தியாதோப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன், குற்றப் பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
குமாரக்குடி அருகே சந்தேகத்திற்கிடமாகநின்ற நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர், தான் சாமிநாதனிடம் பணத்தை பறித்து சென்றதை ஒப்புகொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். அவரது பெயர் கொளஞ்சி (50) என தெரிய வந்தது.