உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தை தாலுகா ஆபீஸ் அருகிலேயே அமைக்க வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்
குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தை மீண்டும் தாலுகா ஆபீஸ் அருகிலேயே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகம் குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் 1885-ம் ஆண்டிலிருந்து இயங்கி வந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் தாலுகா அலுவலகம் புதிதாக கட்டும் பணி தொடங்கப்பட்டது. அதற்காக அதன் அருகில் இருந்த சார்பதிவாளர் அலுவலகம் இடிக்கப்பட்டு தற்காலிகமாக தற்போது குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வந்துவிட்டது. இதன் அருகிலேயே பல ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தில் குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகம் கட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குடியாத்தம் முன்னாள் நகர மன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.எம். தேவராஜ் முதல்&அமைச்சர், பத்திரபதிவுத்துறை அமைச்சர், பத்திர பதிவுத்துறை தலைவர், கலெக்டர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுமார் 150 ஆண்டுகளாக குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்தது. சார்பதிவாளர் அலுவலகம் வந்து செல்லும் பொது மக்கள், வயதான பெண்கள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு நகரின் மையப்பகுதியில் இருந்ததால் ஏதுவாக அமைந்திருந்தது.
இந்நிலையில் தனிநபர் ஒருவர் குடியாத்தத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டுக்கு அருகே உள்ள தனது சொந்த இடத்தில் 21 சென்ட் நிலத்தை தானமாக சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த இடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் வந்தால் சுற்றுப்பகுதியில் உள்ள வீட்டுமனைகள் அதிக விலைக்கு விற்கும் நிலை ஏற்படும் அதனால் அப்பகுதியில் சார்பதிவாளர் அமைக்க இலவசமாக இடத்தை வழங்க இருப்பதாகவும் அதனை ஏற்க கூடாது எனவும் குடியாத்தம் நகர மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு மிகவும் ஏற்ற வகையில் நகரின் மையப் பகுதியில் தாலுகா அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாது காப்பில்லாத இடமாகவும் ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகத்தை அமைக்கக் கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.