உள்ளூர் செய்திகள்
அவினாசி கிராம ஊராட்சி பகுதிகளில் கூடுதல் கொசுப்புழு பணியாளர்கள் நியமிக்க கோரிக்கை
அவிநாசி பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பினும் கிராம ஊராட்சி பகுதிகளில் காய்ச்சல் பரவுகிறது.
அவிநாசி:
அவிநாசி பேரூராட்சி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட 31 கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க உள்ளாட்சி நிர்வாகத்தினரும் பொது சுகாதாரத் துறையினரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதில் அவிநாசி பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பினும் கிராம ஊராட்சி பகுதிகளில், காய்ச்சல் பரவுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமாகியுள்ளனர் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
திறந்தவெளியில் உள்ள நல்ல தண்ணீர், வீணாக கிடக்கும் வாகனங்களின் டயர் உள்ளிட்ட இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் தான் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியாகும் நிலையில், அவற்றை கண்டறிந்து திறந்த நிலையில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தி அங்கு மருந்து தெளிக்கும் பணியில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
அவ்வகையில் அவிநாசி பேரூராட்சியில் 36 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர். ஆனால் 31 கிராம ஊராட்சிகளுக்கும் சேர்ந்து 20 கொசு ஒழிப்பு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால்தான் நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் டெங்கு காய்ச்சல் தென்படுகிறது என கூறப்படுகிறது.
எனவே ஒவ்வொரு கிராம ஊராட்சிகளுக்கும் குறைந்தது 2 பேர் என கணக்கிட்டாலே 62 பேர் வேண்டும். எனவே கூடுதலாக கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை நியமித்து கள ஆய்வில் கவனம் செலுத்தினால் வரும் காலங்களில் டெங்கு காய்ச்சலை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும் என சுகாதார துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.