உள்ளூர் செய்திகள்
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு- கடலோர போலீசார் விசாரணை
இலங்கையில் இருந்து, யாரும் தங்கக்கட்டி, கஞ்சா போன்ற பொருட்களை கடத்தி வரும்போது படகை விட்டு சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே இலங்கை நாட்டைச் சேர்ந்த பைபர் படகு இன்று தனியாக கரை ஒதுங்கி நின்றது.
தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர குழும போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படகை மீட்டு சோதனை நடத்தினர். ஆனால் அதில் மீன் பிடிக்க தேவைப்படும் வலைகள், மீன் பிடி சாதனங்கள் ஏதும் இல்லை.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இலங்கையில் இருந்து யாராவது அத்துமீறி நுழைந்து படகை விட்டு சென்றார்களா? அல்லது இலங்கையில் இருந்து, யாரும் தங்கக்கட்டி, கஞ்சா போன்ற பொருட்களை கடத்தி வரும்போது படகை விட்டு சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.