உள்ளூர் செய்திகள்
போலீசாரால் கைது செய்யப்பட்ட கார்த்திக் ரோகித்.

ஆற்காட்டில் 3 வாகனங்களுக்கு தீ வைத்த சைக்கோ வாலிபர் கைது

Published On 2022-03-19 09:19 GMT   |   Update On 2022-03-19 09:19 GMT
ஆற்காட்டில் விலை உயர்ந்த பைக்கை பார்த்தாலே எரித்து விடும் சைக்கோ வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன்.இவர் தனது பைக்கை கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று அதிகாலை அந்த பைக்கை யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்பு நிலைய அலுவலர் பரிமளாதேவி தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பைக் முழுவதும் எரிந்து நாசமானது.

அதேபோல் விஷாரத்தை சேர்ந்த யூனுஸ் பாஷா உட்பட 2 பேர் பைக்குகளையும் நேற்று அதி காலை யாரோ மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் சப்&இன்ஸ் பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் பைக்குகளை தீ வைத்து எரிக்கப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது ஒரு வாலிபர் பைக்குகளில் உள்ள பெட்ரோலை திருடி அதே பைக்குகள் மீது ஊற்றி தீவைத்து எரிப்பது தெரியவந்தது. அந்த வாலிபர் ஆற்காடு கஸ்பாவை சேர்ந்த கார்த்திக் ரோகித் (வயது 23) என தெரிய வந்தது. 

அவரை பிடித்து விசாரணை செய்ததில் விலை உயர்ந்த புதிய பைக்குகளை கண்டாலே எரிக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்று கூறினார். இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் கார்த்திக் ரோகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்த பைக்குகள் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News