உள்ளூர் செய்திகள்
வேலூரில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
வேலூரில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் வாகனங்களில் சென்று இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இந்த வாகனத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு பஸ்களில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார். மேலும் பஸ் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உதவி ஆணையர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் பழைய பஸ் நிலையத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். அங்குள்ள பிரபல ஓட்டல் முன்பு ஏராளமான இருசக்கர வாகனங்களை நிறுத்தி இருந்தனர். இதனால் பழைய பஸ் நிலையத்திற்குள் செல்லும் வழியில் அதிக அளவு நெரிசல் ஏற்பட்டது.
இதனை கண்காணித்த கலெக்டர் பிரபல ஓட்டல் முன்பு இது போன்ற வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது. வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனால் ஓட்டல் முன்பு இருந்த வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
கலெக்டர் உத்தரவிட்டது போல தனியார் ஓட்டல் முன்பு எப்போதும் வாகனங்கள் நிறுத்த முடியாத படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.