உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது அரசுபஸ் மோதி பெண் சாவு
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் பெண் பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே அவதானபட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது50). இவரது மனைவி மக்கம்மாள் (42). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று ஓசூருக்கு தருமபுரி&ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரி அருகே வரும் போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மக்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கட்ராமன் பலத்த காயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான மக்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த வெங்கட்ராமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.