உள்ளூர் செய்திகள்
பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ள காட்சி.

காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் மீது கிரேன் மோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2022-03-17 15:46 IST   |   Update On 2022-03-17 15:46:00 IST
காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் மீது கிரேன் மோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேலூர்:

பரதராமியில் இருந்து இன்று காலை வேலூருக்கு அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது.பஸ்சில் பயணிகள் ஏராளமானோர் இருந்தனர். 

காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சிக்னலில் காலை 8.30 மணிக்கு டவுன் பஸ் வந்து நின்றது. அப்போது பெரிய கிரேன் வாகனம் ஒன்று விஐ.டி.சாலை நோக்கி திரும்பியது.

திடீரென கிரேனின் முன்பக்ககம்பி சிக்னலில் நின்ற அரசு டவுன் பஸ் மீது உரசியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்தால் சித்தூர் பஸ் நிறுத்தத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து வேலூர் நோக்கி வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் பயணிகள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.

காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய கிரேன் மற்றும் அரசு டவுன் பஸ்சை அப்புறப்படுத்திய பிறகு அங்கு போக்குவரத்து சீரானது. இன்று காலை ஏற்பட்ட இந்த திடீர் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News