உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரசு பஸ்சில் வந்த ஆம்பூர் பயணி திடீர் சாவு

Published On 2022-03-16 14:50 IST   |   Update On 2022-03-16 14:50:00 IST
அரசு பஸ்சில் வந்த ஆம்பூர் பயணி திடீரென பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் புதுச்சேரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 47).இவர் நேற்று மாலை ஓசூரில் இருந்து ஆம்பூருக்கு அரசு பஸ்சில் வந்தார். 

ஆம்பூர் பஸ் நிலையத்தில் பஸ் நின்றும் கோவிந்தராஜ் இறங்கவில்லை ஆம்பூரை தாண்டி சிறிது தூரம் பஸ் வந்ததும் கோவிந்தராஜ் பஸ்சிலிருந்து இறங்காததை கண்டு சந்தேகமடைந்த பஸ் கண்டக்டர் அருகில் சென்று பார்த்தார். கோவிந்தராஜ் மயங்கிய நிலையில் இருந்தார்.

இதையடுத்து கண்டக்டர், பயணிகள் உதவியுடன் கோவிந்தராஜை பள்ளிகொண்டா பஸ் நிறுத்தத்தில் கீழே இறக்கி படுக்க வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

கோவிந்தராஜ் நீண்ட நேரமாக எழுந்திருக்காததால் அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையில் கோவிந்தராஜ் ஏற்கனவே மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜ் மாரடைப்பால் இறந்தாரா அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News