உள்ளூர் செய்திகள்
பெண்கள் மறியலில் ஈடுபட்ட காட்சி

திருத்தணி அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியல்

Published On 2022-03-16 06:28 GMT   |   Update On 2022-03-16 06:28 GMT
திருத்தணி அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

திருத்தணி:

திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் ஊராட்சிக் குட்பட்ட டி.என்.ஆர். கண்டிகை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் எஸ்.அக்ரஹாரம் ஏரி வழியாக சென்று வந்தனர். கடந்த ஆண்டு பெய்த மழையால் ஏரி நிரம்பியதால் கிராம மக்கள் சாலை வசதி இன்றி, பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து சாலை வசதி கேட்டு கிராம மக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைதொடர்ந்து டி.என்.ஆர். கண்டிகை கிராமத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முயன்றனர்.

ஆனால் அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் அரக்கோணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

Tags:    

Similar News