காட்டு யானைகளை விரட்டும் போது பட்டாசு வெடித்து வனத்துறை ஊழியர் காயம்
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் மகாராஜகடை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாம் உள்ளது. இந்த யானைகளை விரட்டும் பணியில் தமிழக வனத்துறை அதிகாரிகள் யானைகளை பின் தொடர்ந்து விரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மகராஜ கடை வனபகுதியில் இருந்து வந்து விவசாய பயிர்களை நாசம் செய்து விட்டு சென்றது. இந்த யானைகளை பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற வனத்துறை அதிகாரிகள் நேற்று இரவு மகாராஜகடை மலை வனப்பகுதியில் தங்கியிருந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது வனக் காப்பாளர் ரகமத்துல்லா தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது யானைகளை விரட்ட வன ஊழியர் சிலம்பரசன் பட்டாசை வானத்தை நோக்கி விட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக கையில் பட்டாது வெடித்தது. இதில் அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிலம்பரசனை அங்கிருந்து வனத் துறை ஊழியர்கள் மீட்டு உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.