உள்ளூர் செய்திகள்
போராட்டம்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து கடலூரில், விவசாய சங்கத்தினர் போராட்டம்

Published On 2022-03-15 17:31 IST   |   Update On 2022-03-15 17:31:00 IST
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து கடலூரில் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:

தமிழக காவிரி நதி நீர் பாசன உரிமையை தடுக்கிற நிலையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக கர்நாடக அரசை கண்டித்தும், அதை தடுத்து நிறுத்தாமல், துணை போகும் மத்திய அரசை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று, கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குப்புசாமி தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். இதை அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர், புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் ஊர்வலமாக செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், போராட்டம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இருப்பினும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஊர்வலமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் போலீசாரிடம் கேட்டனர். ஆனால் போலீசார் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இதையடுத்து விவசாய சங்கத்தினர், தாங்கள் வந்த தனியார் பஸ்சில் கலெக்டர் அலுவலகம் சென்றனர். ஒரு சிலரை போலீசாரே தங்களது வாகனத்தில் ஏற்றி, கலெக்டர் அலுவலகத்தில் விட்டனர்.

அங்கு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு குப்புசாமி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் லாரன்ஸ், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை செயலாளர் மணவாளன், பொருளாளர் ஏ.குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் துரை, பொதுச்செயலாளர் குளோப், விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எம்.சேகர், பட்டுசாமி, அன்பழகன், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

போராட்டத்தில், கர்நாடக மற்றும் மத்திய அரசை கண்டித்தும், தேசிய ஊரக வேலைஉறுதி அளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். ரூ.230 கூலி வழங்க வேண்டும். வேலை செய்த தொழிலாளிக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும், வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News