உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் அருகே பள்ளியில் ஏற்பட்ட மோதலில் 9-ம் வகுப்பு மாணவனை பிளேடால் வெட்டிய சக மாணவன்
குடியாத்தம் அருகே பள்ளியில் ஏற்பட்ட மோதலில் 9-ம் வகுப்பு மாணவனை சக மாணவன் பிளேடால் வெட்டினார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர்.
இதில் இளைய மகனுக்கு 14 வயதாகிறது. அதேபகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று அதே பள்ளியில் படிக்கும் சக மாணவர்களுடன் இந்த மாணவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது சக மாணவர்கள் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர். இந்நிலையில் மாணவன் இன்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வந்தார். பள்ளியில் புத்தக பையை வைத்து விட்டு பென்சில் வாங்குவதற்காக அருகே உள்ள பெட்டிக் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது நேற்று தகராறில் ஈடுபட்ட சக வகுப்பு மாணவன் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவரை வலது மற்றும் இடது பக்க மார்பு, கை மற்றும் முதுகுப் பகுதியில் சரமாரியாக பிளேடால் வெட்டி உள்ளார். இதில் பள்ளி சீருடை முழுவதும் ரத்தகறையானது.
உடனடியாக அங்கிருந்த சக மாணவர்கள் கிராம மக்கள் ஆசிரியர்கள் படுகாயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.