உள்ளூர் செய்திகள்
கொள்ளை

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் தம்பதியிடம் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை

Published On 2022-03-15 07:23 GMT   |   Update On 2022-03-15 07:23 GMT
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பட்டப்பகலில் துணிகரம் வீடு புகுந்து கத்தி முனையில் தம்பதியிடம் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை 2 வாலிபர்கள் கைது-2 பேருக்கு வலைவீச்சு
திருச்சி:

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருணாச்சல நகர் 8-வது தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது பஷீர் (வயது 45). இவர் வழக்கம் போல் மதியம் சாப்பிட்டு விட்டு மனைவியுடன் வீட்டில் இருந்தார். அப்போது திருமணமாகி வெளியூரில் கணவருடன் வசித்து வரும் அவரது மூத்த மகள் வீடியோ காலில் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சமீரா பானு என்ற பெண் அவரது வீட்டுக்கு வந்தார். உடனே முகமது பஷீரின் மனைவி அவருக்கு உணவு பரிமாறினார். இதற்கிடையே அடையாளம் தெரியாத 3 மர்ம ஆசாமிகள் திடீரென்று அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர்.

இதனை சற்றும் எதிர்பாராத முகமது பஷீர் அவர்களிடம் யார் நீங்கள், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அந்த நபர்கள் முகமது பஷீர் அவரது மனைவி மற்றும் சமீராபானு ஆகியோரை கத்தி முனையில் மிரட்டினர்.

இதனால் அவர்கள் அதிர்ச்சியல் உறைந்தனர். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டின் பீரோவில் இருந்த நான்கு பவுன் தங்க சங்கிலி, வெள்ளி கொலுசு, உயர்தர கைக்கடிகாரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்த 2 இருசக்கர வாகனங்களில ஏறி தப்பிச் சென்றனர்.

பட்டப்பகலில் சில மணித் துளிகளில் நடந்தேறிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி பாதிக்கப்பட்ட முகமது பஷீர் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிவு செய்து உறையூர் எழில்நகர் கல்நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்த நவீன் (27)திருவெரும்பூர் சுருளி கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்கிற பார்த்திபன் (30 )ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இந்த இருவர் மீதும் உறையூர், அரியமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளது. தப்பிச்சென்ற அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News